சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் பிறந்த தினம்

இன்று சேர் பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14 1853 - ஜனவரி 9 1924) அவர்கள் பிறந்த தினமாகும்


பொன்னம்பலம் அருணாசலம் கேட் முதலியார் என அழைக்கப்பட்ட அருணாசலம் பொன்னம்பலம், செல்லாச்சி ( சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி ) ஆகியோரின் மூன்றாவது புதல்வர். குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் சகோதரர். இவரது மனைவியின் பெயர்: சுவர்ணம் நமசிவாயம். பிள்ளைகள் : அருணாசலம் மகாதேவா, சிவானந்தன் அருணாசலம் , அருணாசலம் இராமநாதன் ஆகியோர்
சட்ட நிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்குப் பின் அங்கத்துவம் வகித்தார். அரசாங்க சேவையில் பணியாற்றும் காலத்திலேயே சுயராஜ்ய உணர்வால் உந்தப்பெற்றார். ஓய்வு பெற்ற பின் அரசியல், சமூக, கல்விப் பண்பாட்டுத் துறைகளிலே ஈடுபட்டார். 1919-ம் ஆண்டு இலங்கையருக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதல் தலைவராக 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலம் விளங்கினார். ஆனால் சேர். ஜேம்ஸ் பீரிசும், நு. து. சமரவிக்கிரமவும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அருணாசலம் உட்படத் தமிழ்த் தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகி தமிழர் சீர்திருத்தக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினர். அவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர்.
தானே முன்னின்று உருவாக்கி அதன் முதற் தலைவராக இருந்து இலங்கைத் தேசியக் காங்கிரஸை தாபித்த பின் அதை விட்டு வெளியேறி சேர் பொன்.அருணாசலம் அவர்கள் இலங்கைத் தமிழர் கழகத்தைத் (Ceylon Tamil League) தொடங்கிய போது அதன் இரண்டாம் பொதுக் கூட்டத்தில் பின்வருமாறு கூறினார்.
“அரசியற் தேவைப்பாட்டின் நிமித்தமே எங்கள் இக்கழகம் உருவாகியுள்ளது. ஆனால், அதன் உருவாக்கத்திற்கு அரசியலே காரணம் என்று முடிவு செய்து விடமுடியாது. அதன் நோக்குகள் பரந்துபட்டன. காலாதிகாலமாகப் பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து இன்று இந்த நிலைக்கு வர அவர்களுக்கு அனுசரணையாக இருந்த தமிழர் இலட்சியங்களை நடைமுறைப்படுத்தவும் அவற்றை இலங்கை, தென் இந்தியா மற்றும் தமிழர் வாழும் குடியேற்ற நாடுகளில் விருத்தியடையச் செய்யவும் தமிழர்கள் செறிந்து வாழும் தமிழகத்துடன் தொடர்பு கொண்டு ஐக்கியமுற்று வாழவும் எமது நோக்குகள் வியாபித்து விரிவடைந்துள்ளன. நாம் தமிழர் என்ற அந்தத் தனித்துவத்தைப் பேண விரும்புகிறோம். மரபு வழிச் சொத்தாக நாம் பெற்ற எமது பாரம்பரியங்களைப் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழ் தனித்துவத்துடன் பின்பற்ற உறுதி பூண்டுள்ளோம். மீனுமல்லாமல் கோழியுமல்லாமல், இறைச்சியுமல்லாமல் தனிச்சார்பற்று வாழும் பல்தேசப் பிறவிகளாக வாழ நாம் விரும்பவில்லை”.

இயற்றிய சமய நூல்கள்

A Revel in Bliss - தாயுமான சுவாமிகள் பாடல்களிற் சிலவற்றின் மொழிபெயர்ப்பு 1895. A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar - ஜி. யூ. போப் அவர்களுடன் இணைந்து மொழிபெயர்த்த மாணிக்கவாசகரினதும் தாயுமானவரினதும் பாடல்கள்

சென்னை, 1897. Studies and Translations from the Tamil - ஆய்வுகளும் மொழிபெயர்ப்புகளும்

சென்னை. Studies and Translations, Philosophical and Religious - கட்டுரைத் தொகுதி முதற் பதிப்பு:1937

திருக்கோவையார், கல்லாடம், திருமுருகாற்றுப்படை, ஞானவாசிட்டம், புறநானூறு என்பவற்றிலிருந்தும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

1 comments:

said...

இவரைப்பற்றி மேலதிக விபரமிருந்தால் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும் நன்றி